Pages

Tuesday, 12 February 2013

கலக்கல் காக்டெயில்- 102

ஜாங்கிரியா தூக்குல போட..

இந்திய அரசாங்கம் அவசர அவசரமாக இரண்டு தீவிரவாதிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கடந்த மூன்று மாத காலத்தில் தூக்கில் போட்டிருக்கிறது.  கசாப் கையும் களவுமாக பிடிபட்டவன். ஆனால் அப்சல் குரு சந்தர்ப்பசூழ்நிலை சாட்சிகளால் (circumstantial evidences) பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறான். இவனுக்கு ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட அடுத்த நாளே தண்டனை நிறைவேற்றப் படுகிறது.

காஷ்மீரில் கடந்த சில வருடங்களாகவே நிலவி வந்த அமைதி இப்பொழுது சற்று ஆட்டம் கண்டிருக்கிறது. சமீபத்திய நடவடிக்கைகளால் இப்பொழுது ராஜீவ் கொலை குற்றவாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மனித உரிமை ஆணையம் இந்திய அரசாங்கத்தை தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு வெகுநாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறது. வீ.ஆர். கிருஷ்ண ஐயரும் வெகு காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். யாருடைய உயிரையும் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அது அரசாங்கமே இருந்தால் கூட. யாரையோ திருப்திப் படுத்த அவசர அவசரமாக செய்திருக்கிறார்கள்.

ராஜீவ் கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் இப்பொழுது பேசாமல் இருக்கிறார்கள். இதில் உள்ள நியாய தர்மங்கள் புரியவில்லை.

தூக்கில் போடுவதற்கு பதில் தண்டனையை கடுமையாக்கி சிறையிலே வைத்திருக்கலாமே. ஆனால் அவர்களை பராமரிக்கும் செலவையும் வீண் செலவு என்று  குரல் கொடுக்க ஆளிருக்கிறது.

என்னதான் செய்ய?

நடிகவேள் 

ஜூனியர் விகடன் கழுகார் பதில்களில் ஒரு கேள்வி. விஸ்வரூபம் படத்திற்கு வந்த மாதிரி அன்று நடிகவேள் எம்.ஆர்.ராதாவிற்கு வந்தால் என்ன செய்திருப்பார்?

அவர் காணாத பிரச்சினைகள் இல்லையாம். அவர் நாடகம் நடக்கும் பொழுதே பாம்பு, மாடு, நாய் முதலியவற்றை அரங்கின் உள்ளே விடுவார்களாம். மேடையில் அவர் வந்தால் செருப்பு சோடா பாட்டில் முதலியவை பறக்குமாம். ஆனாலும் கவலைபடாமல் தன் நாடகங்களை தொடர்ந்தார். அவர் சட்டம் ஒழுங்கை கெடுக்கிறார் என்றெல்லாம் அன்றைய காங்கிரஸ் அரசு வழக்கு தொடர்ந்ததாம். நான் நாடக அரங்கை வாடகைக்கு எடுத்திருக்கிறேன், இங்கு நாடகம் பார்ப்பவர்கள் தங்கள் விருப்பப்படிதான் உள்ளே வருகிறார்கள் அவர்களை தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்று வாதிட்டாராம்.

அவரே தான் தன்னுடைய ரசிகர்கள் ரசிகர்மன்றம் ஆரம்பிக்கப்போவதாக அவரிடம் சொன்ன பொழுது, கூத்தாடி பசங்களுக்கெல்லாம் மன்றம் வைக்காதீங்கப்பா, நாடு உருப்படாது என்றாராம்.

வித்யாசமான மனிதர் தான். அவருடைய வசன உச்சரிப்பு ஸ்டைல், அந்த மாடுலேஷன், அந்த நக்கல் நடிப்பிற்கு அவருடைய கொள்கை பிடிக்காதவர்கள்கூட அவரது நடிப்பிற்கு அடிமை என்றால் அது மிகையாகாது.

ரசித்த கவிதை

பஸ்ஸில் போனபோது
சாலையோரம் இரண்டு செம்பாறைகள்
ஒன்றையொன்று கேலிசெய்து கொண்டன
ஒன்று உறுதியளித்தது
இயேசு சீக்கிரம் வருகிறார்
இன்னொன்று சொன்னது
hmt வாட்சுகள்
உங்கள் நேரத்தை
சரியாக காட்டும்

------------------------ நாகூர் ரூமி
 
ஜொள்ளு


12/02/2013

3 comments:

  1. நடகவேள் எம்.ஆர்.ராதா பற்றிய தகவல் அறிந்தேன்.
    நன்றி.
    கவிதை எனக்குப் புரியவில்லை கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  2. அருணா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. கலக்கினாத்தானே காக்டெயிலே!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.