Pages

Monday, 23 January 2017

ஜல்லிக்கட்டு போராட்டமும் விருப்பமில்லா திருப்பங்களும்

அலங்காநல்லூரில் சில நாட்களாகவே புகைந்துகொண்டிருந்த நெருப்பு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டவுடன், எல்லா நகரங்களிலும் பரவ ஆரம்பித்துவிட்டது. சென்னை மெரீனா கடற்கரையில் அது இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுக்கும் என்று அரசு மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்காத ஒன்று. முதலில் ஐயாயிரம் என்ற கூட்டம் நாட்கள் செல்ல செல்ல லட்சக்கணக்கில் பெருக ஆரம்பித்தது. இருந்தாலும் போராட்டம் ஒரு  சிறு அசம்பாவிதம் இல்லாமல் வெகு சீராக நடந்தது. அரசும் இதற்கு முதல் துணை போனதன் காரணம் நமக்குப் புரியாமல் இல்லை.

இந்த போராட்ட இளைஞர்கள் அரசியல் வாதிகளை முதலில் தங்களுள் கலக்க (மன்னிக்கவும்) விடவில்ல. அங்கே ஆதரவு தர வந்த ஒன்றிரு தலைவர்களையும் நீங்க போயி உங்க வேலையைப் பாருங்க..........நாங்க பாத்துக்கறோம் என்று அனுப்பிவைத்துவிட்டனர். அடுத்ததாக சினிமாகாரர்களையும் கிட்டே அண்டவிடவில்லை ஓரிருவர் நீங்கலாக. வந்த ஓரிருவரும் அவர்களின் உணவு தேவைகளையும், பெண்கள் கழிப்பிட வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்து  போராட்டம் சீராக செல்ல வழிவகுத்தனர். நாள் செல்ல செல்ல இந்த அறப்போராட்டம் எல்லோராராலும் பாராட்டுகள் பெற மேலும் மேலும் அதிக மக்கள் வந்து சேர ஆரம்பித்தனர்.

போராட்டத்தின் வீர்யத்தை உணர்ந்த அரசும் மத்திய அரசை அணுகி ஜல்லிகட்டு நடத்த உரிய சட்ட திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது, அதே சமயத்தில் இந்த மெரீனா புரட்சியின் ஆணிவேரை ஆராய ஆரம்பித்தது. சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை வெள்ளத்தில் உதவிய இளைஞர்கள்தான் இந்த முறை இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள், இதை பல்வேறு நகரங்களிலிருந்து 136 பேர்கள் கொண்ட குழு செய்திருக்கிறது. இதை முன்பே மோப்பம் பிடித்த உளவுத்துறை மேலிடத்தில் சொல்லியிருக்கிறது.

இந்த அறவழி போராட்டம் இந்த இளைஞர்களின் வேறொரு பக்கத்தை காண்பித்திருக்கிறது. மேலும் போராட்டம் என்றால் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இன்றைய அரசியல்வாதிகளுக்கு தெரிய வைத்திருக்கிறது. இதே போராட்டம் அரசியல்வாதிகளால் நடத்தப்பட்டிருந்தால் எத்தனை உயிர்களை காவு வாங்கி இருக்கும் மற்றும் எத்தனை பொது சொத்து சேதமாகி இருக்கும் என்று நமக்கு தெரியும்.

இதற்கிடைய நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று கூடிய நடிகர்களை காமெடி பீசாக மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு நடிகர் ஏற்கனவே சொல்லியிருந்தார், இது இளைஞர்களுக்கான் போராட்டம் அதில் நாம் "SHOW STEAL" செய்யக் கூடாது என்று, இருந்தாலும் அவர்கள் ஆடிய தனி ஆவர்த்தனத்தில் அவர் கலந்து கொண்டது வியப்பே.

இந்த இளைஞர்களின் எழுச்சி, அறவழிப்போராட்டம் வடக்கத்தியானையும் நம்மை திரும்பி பார்க்க வைத்தது. இப்பொழுது மத்திய அரசும் மாநில அரசும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, போராடும் இளைஞர்கள் எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று முரண்டு பிடிக்க, இனி அரசியல் நாடங்கள் தொடங்க ஆரம்பித்தன.

இதன் நடுவே இந்த போராட்டத்தை "FREE SEX" என்று சொன்னால் கூட ஐம்பதாயிரம் பேர் கூடுவார்கள் என்று கூறி "PETA" ஆர்வலர் வாங்கிக்கட்டிக்கொண்டார். இவரிடம் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில்  ஒரு நபர் ஜல்லிக்கட்டை தடை செய்கிறீர்களே, ஏன் கோயில்களில் யானைகளையும், குதிரைப் பந்தயங்களையும் தடை செய்யவேண்டியதுதானே, என்றே கேள்விக்கும் எதை தடை செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று பதிலளித்தார். இந்த ஆயா இனி வெளியே வருவது சற்று கடினம்தான், வந்தாலும் இவர்கதி இவரால் கைவிட்டப்பட்ட தெருநாய்கள் கதிதான்......(இது தனி பதிவு மேட்டர்)

சரி இப்பொழுது விருப்பமில்லா திருப்பங்களுக்கு வருவோம்.

அரசு விரைவு மசோதா தவிர வேறு எதுவும் செய்ய இயலாத கையறு நிலை.
இளைஞர்களுக்கோ காளையை காட்ச்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டால் ஜல்லிகட்டு நிரந்தரமாகிவிடும் என்ற புரிதல். அதுவரை போராட்டம் தொடரும் என்ற நிலை.

சட்டசபை தொடங்க வேண்டும், அதற்குள் மெரினாவில் கூடியுள்ளவர்களை கலைக்க வேண்டும் என்று இந்த போராட்டத்தை ஆதரித்த ஓரிரு பிரபலங்களை அணுக அவர்களுக்கு இளைஞர்களுக்கு புரிய வைக்க முடியாத நிலை. அவர்களும் சட்ட சிக்கல்களை கூறி போராட்டத்தை கைவிடுங்கள் என்று சொல்லி சமாதானப்படுத்தாமல் அரசியலும் மதவாதங்களையும் கலந்து போராட்டம் கொச்சைப் படுத்தப்பட இனி இதன் போக்கு நமக்கு தெரிய ஆரம்பித்ததுவிட்டது.

இனி இந்த இளைஞர்கள் கூட்டத்தில் அரசியல் ரவுடிகளும், சமூக விரோதிகளும்  வலுக்கட்டாயமாக கலக்கப்பட்டு தடியடி கண்ணீர் புகை, கல்வீச்சென்று கலைக்கப்பட்டு சின்னா பின்னமாகும் என்று யாவருக்கும் தெரியும் அதுதான் நடந்து கொண்டும் இருக்கிறது.


ஆனால் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கல்வீச்சு கல்லடி காவலர்களுக்கும் உண்மையான போராட்ட இளைஞர்களுக்கும் இடையே என்று நினைத்தால் நீயும் தமிழனே!!!!

இனி இந்தப் போராட்டத்தின் நிறைவு அரசியல்வாதிகளால் முடிக்கப்படும்.........அவர்களது ஸ்டைலில்.........

10 comments:

  1. இந்த எகத்தாளங்களுக்கு ஒரு முடிவு விரைவில் வரும்...

    ReplyDelete
  2. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. இவ்வளவு அருமையாக ஆரம்பித்து நடத்தி வருகின்றார்களே, எப்படி முடித்து வைப்பார்கள் என்று நினைத்திருந்தேன், அரசியல்வாதிகள் அவர்கள் பாணியில் முடித்து வைக்கின்றார்கள்.

    ReplyDelete
  4. மிக அருமையாக சொன்னீர்கள் கும்மாச்சி

    ReplyDelete
  5. மிகச் சரியாக சொன்னீர்கள்!

    ReplyDelete
  6. நல்ல தொடக்கம்... மோசமான முடிவு....

    ReplyDelete
  7. சம்பத் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. கோபால் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  9. வெங்கட்நாகராஜ் உங்கள் கருத்து உண்மையே.

    ReplyDelete
  10. ப்ரகேஞகன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.